உள்நாட்டு செய்திகள்

மத, கலாசார பிரச்சினைகளுக்கு தீர்வாக ‘ஆலோசனை சபை’

கலாசார மற்றும் மத ரீதியாக உருவாகும் பிரச்சினைகளின்போது அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக மதங்களுக்கிடையிலான ஆலோசனை சபையொன்றை அமைக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வியாழக்கிழமை (25) அறிவித்தார்.

நேற்று (25) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சர்வமத தலைவர்களின் சந்திப்பில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி, மேற்கண்ட அறிவித்தலை விடுத்தார்.

மதங்களுக்குகிடையிலான ஆலோசனை சபை தொடர்பான பிரேரணை, கடந்த அரசாங்க ஆட்சியின் போது கலந்துரையாடப்பட்டபோதிலும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என பேராசிரியர் வண. பெல்லன்வில விமலரத்தன நாயக்க தேரர் சுட்டிக்காட்டியதுடன் அதற்காக ஜனாதிபதி தைரியத்துடன் முன் நின்றமைப் பற்றி மகா சங்கத்தினர் உள்ளிட்ட சர்வமதத் தலைவர்கள், அவருக்கு தமது பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

இங்கு உரையாற்றிய கொழும்பு பேராயர் கர்தினால் வண. மல்கம் ரஞ்சித் ஆண்டகை, இப்பிரேரணை தொடர்பாக தனது பூரண இணக்கப்பாட்டைத் தெரிவித்தார். பௌத்த, கத்தோலிக்க, இஸ்லாம், இந்து ஆகிய இனங்களுக்கிடையில் காணப்படவேண்டிய மத நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பி அனைத்து மக்களுக்கிடையேயும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புதல் தனது அரசின் நோக்கமாகும் என ஜனாதிபதி, இதன்போது குறிப்பிட்டார்.

ஆயினும், தீவிரவாதிகளின் செயற்பாடுகள் காரணமாக ஒரு சில சந்தர்ப்பங்களில் பிரச்சினைகள் எழுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புரிந்துணர்வுடன் இதற்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ளுதல் நம் அனைவரதும் பொறுப்பாகும் எனவும் கூறினார்.

நாட்டில் உள்ள அனைத்து இனங்களுக்கிடையிலும் சமாதானத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட அரசினால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டம் தொடர்பாக சர்வமத தலைவர்கள் புகழ்ந்து பேசியதுடன், அரசியல் ரீதியாக கூட்டு இணக்கப்பாட்டுடன் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டத்துக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

மதங்களுக்கிடையிலான ஆலோசனை சபையை நியமித்தல் மற்றும் அதன் கடமைப் பொறுப்புக்கள் பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அனைத்து மதத் தலைவர்களும் ஒன்றிணைந்து விரிவாக கலந்துரையாடி இது தொடர்பான தீர்மானத்தை அரசுக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

Related posts

நாமல் FCID முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பாணை

wpengine

மின் கட்டணத்துடன் நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த..!

wpengine

சவூதி அமெரிக்கா தூதரகம் அருகே தற்கொலை படைத்தாக்குதல்

wpengine